காவல் நிலையத்தில் திரண்ட பாஜக தொண்டர்கள் – சம்பவம் என்ன?
கும்பகோணம் அருகே பாஜக மாவட்ட நிர்வாகி உள்ளிட்டோர் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து புகார் அளிக்க பாஜகவினர் திரண்டதால் காவல் நிலையத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
தஞ்சாவூர் பாஜக வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராஜ், திருவாரூருக்கு சென்று திரும்பி கும்பகோணம் நோக்கி காரில் பயணித்துக் கொண்டிருந்தார்.
திருச்சேறை அருகே வந்தபோது, மதுபோதையில் இருசக்கர வாகனங்களில் வந்த 15-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், காரை மோதுவது போல அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஓரமாக செல்லுமாறு செல்வராஜ் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள், கல் மற்றும் கட்டைகள் கொண்டு காரை கடுமையாக சேதப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலைத் தடுக்க முயன்ற ஓட்டுநர் உள்ளிட்ட மூன்று பேரை அவர்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்ததை அடுத்து, தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மூன்று பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக நாச்சியார் கோவில் காவல் நிலையத்தில் செல்வராஜ் புகார் மனு அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, காவல் நிலையத்தில் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் கூடிவந்ததால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டது.