நிர்வாகச் சிக்கல் காரணமாக குரூப்–2, 2A தேர்வுகள் தள்ளிவைப்பு – தேர்வர்களிடையே கடும் அதிருப்தி
நிர்வாகத் தவறுகள் காரணமாக, தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த TNPSC குரூப்–2 மற்றும் குரூப்–2A முதன்மைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர் அறிவிப்பு, தேர்வு எழுதவிருந்த விண்ணப்பதாரர்கள் மத்தியில் பெரும் கோபத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார்பதிவாளர், வனவர் உள்ளிட்ட குரூப்–2 பதவிகளுக்கும், முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர் போன்ற குரூப்–2A பதவிகளுக்கும் மொத்தமாக 828 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு ஜூலை 15ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற்ற முதல்நிலைத் தேர்வில் 4 லட்சத்து 20 ஆயிரத்து 217 பேர் பங்கேற்றனர். அதில், குரூப்–2 பிரிவில் 1,126 பேரும், குரூப்–2A பிரிவில் 9,457 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக TNPSC அறிவித்திருந்தது. இத்தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வு இன்று தமிழகம் முழுவதும் 47 தேர்வு மையங்களில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.
சென்னையில் மட்டும் 7 மையங்களில் 3,221 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், நிர்வாக ரீதியான குழப்பம் பெரும் சிக்கலை உருவாக்கியது. குறிப்பாக, சென்னை அரும்பாக்கம் பகுதியில் 700 தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட்டுகள் வழங்கப்பட்டிருந்த போதிலும், அங்கு 150 பேருக்கு மட்டுமே இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தது தேர்வர்களை அதிர்ச்சியடையச் செய்தது.
இந்த குளறுபடிகளை கண்டித்து ஆத்திரமடைந்த தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.