சென்னையில் போக்குவரத்துறை ஏற்பாட்டில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
சென்னை மாநகரில் போக்குவரத்துத் துறை முன்னெடுப்பில், சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் சைக்கிள் பேரணி (சைக்ளோத்தான்) வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
“பாதுகாப்பான பயணம் – பாதுகாக்கப்பட்ட சாலைகள்” என்ற கருத்தை மையமாகக் கொண்டு, நேப்பியர் பாலம் அருகே இந்த சைக்கிள் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதின் அவசியம், விதிமீறல்களை தவிர்ப்பது, மேலும் சைக்கிள் ஓட்டத்தின் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது போன்ற விடயங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
சென்னை போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் விஜயகுமார் இந்த நிகழ்வை தொடங்கி வைத்தார். இச்சைக்ளோத்தான் பேரணியில் 500-க்கும் அதிகமான பள்ளி மாணவ, மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர். நேப்பியர் பாலத்தில் ஆரம்பமான இந்த சைக்கிள் பயணம், திரு.வி.க. சாலை, அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாகச் சென்று நிறைவடைந்தது.