காணும் பொங்கல் உற்சாகம் – பல மாவட்டங்களில் பாரம்பரிய விளையாட்டுகள் களைகட்டின
காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம்புதூர் கிராமத்தில் பாரம்பரிய மஞ்சு விரட்டு போட்டி மக்களது பெரும் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை, திருப்பத்தூர், வாணியம்பாடி, ஓசூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் அதிகமான காளைகள் போட்டியில் பங்கேற்க அவிழ்த்துவிடப்பட்டன.
அதேபோல், வந்தவாசி அருகேயுள்ள நல்லூர் கிராமத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற முயல் விடும் திருவிழா அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்கும் என்ற நம்பிக்கையுடன், முயலை குழந்தைகளின் மீது வைத்து சடங்கு மேற்கொள்ளப்பட்டது. பின்னர், யாராலும் பிடிக்க முடியாதபடி முயலை வேகமாக எடுத்துச் சென்று அருகிலுள்ள கரும்புத் தோட்டத்தில் விடப்பட்டது. இந்த தனித்துவமான விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் காணும் பொங்கல் தினத்தை முன்னிட்டு குதிரைப் பந்தயப் போட்டிகள் நடத்தப்பட்டன. புதுக்குதிரை, கரிச்சான் குதிரை, நடுக்குதிரை மற்றும் பெரிய குதிரை என நான்கு பிரிவுகளில் நடைபெற்ற இந்தப் போட்டி, 5 கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்தது. சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த மக்கள் உற்சாகத்துடன் போட்டிகளை ரசித்தனர்.
இதற்கிடையே, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள கேசவன்புத்தன்துறை கிராமத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு கட்டுமரப் படகு போட்டிகள் மற்றும் நீச்சல் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பல்வேறு மீனவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி, வெற்றி பெற்று பரிசுகளும் கேடயங்களும் பெற்றனர்.