சென்னை மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் அதிரடி இடமாற்றம்: லஞ்ச புகாரில் ககன்தீப்சிங் பேடி அதிரடி!
சென்னை:
சென்னை மாநகராட்சியில் கட்டட அனுமதி வழங்கும் நகரமைப்புப் பிரிவில் லஞ்சம் மற்றும் முறைகேடு புகார்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, அப்பிரிவில் பணிபுரிந்த பெரும்பாலான ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி சார்பில் 3 மாடிகள் வரையிலான வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் கட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதில் 5,000 சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களிலும், 5,000 முதல் 10,000 சதுர அடி வரையிலான பெரிய கட்டடங்களுக்கு மாநகராட்சி தலைமையகமான ரிப்பன் மாளிகையில் உள்ள நகரமைப்புப் பிரிவிலும் அனுமதி வழங்கப்படுகிறது.
விதிமுறைகளின்படி, ஆவணங்களைப் பரிசீலித்து 27 நாட்களுக்குள் கட்டுமான அனுமதி வழங்கப்பட வேண்டும். ஆனால், நகரமைப்புப் பிரிவு மற்றும் மண்டல அலுவலகங்களில் விதிமீறல்கள், லஞ்சக் கோரிக்கைகள் காரணமாகப் பல விண்ணப்பங்கள் எவ்விதக் காரணமும் இன்றி நீண்ட காலமாகத் தேக்கமடைந்துள்ளதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடியின் உத்தரவின்பேரில், நகரமைப்புப் பிரிவில் பணிபுரிந்த கண்காணிப்புப் பொறியாளர், செயற்பொறியாளர் உள்ளிட்ட 12 உயர் அதிகாரிகள் இதர பிரிவுகளுக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதிலாகப் பிற பிரிவுகளில் இருந்த புதிய அதிகாரிகள் இப்பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.




