இறங்கி வரும் அமெரிக்கா: போரை முடிக்க ரூ.28.5 லட்சம் கோடி நிதி? – அதிரடிப் பின்னணி!
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கிய போர் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், தற்போது அதில் ஒரு முக்கியத் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள தற்காலிகப் போர் நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீட்டிப்பதற்கான புதிய வரைவு ஒப்பந்தம் தயாராகியுள்ளது. இந்த ஒப்பந்தம் தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் இறுதி ஒப்புதலுக்காகக் காத்திருப்பதாக அந்நாட்டுத் துணை அதிபர் ஜேடி வான்ஸ் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். சவூதி அரேபியா மற்றும் கத்தார் போன்ற நாடுகள் இந்தப் போரை முடிக்கத் தீவிர முயற்சி எடுத்து வரும் வேளையில், பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் இடையே முதன்மை இடைத்தரகராகச் செயல்பட்டு இந்தப் பேச்சுவார்த்தையைச் சாத்தியமாக்கியுள்ளது.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு நாடுகளுக்கும் சாதகமான பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எவ்வித சுங்கக் கட்டணமும் இன்றி தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய ஈரான் சம்மதித்துள்ளது. மேலும், அடுத்த 30 நாட்களுக்குள் அப்பகுதியில் உள்ள அனைத்து கண்ணிவெடிகளையும் அகற்ற ஈரான் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், வணிகக் கப்பல் போக்குவரத்து வழக்கம் போல் தொடங்கியவுடன் அமெரிக்கா தன் கடற்படை முற்றுகையைத் திரும்பப் பெறும் எனத் தெரிகிறது. அடுத்த 60 நாட்களில் நடக்கவிருக்கும் முதற்கட்ட பேச்சுவார்த்தையில், ஈரானிடம் உள்ள சுமார் 970 பவுண்டு செறிவூட்டப்பட்ட யுரேனியம் மற்றும் கூடுதலாக உள்ள 10 டன் அணுப் பொருட்களை அகற்றுவது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
மறுசீரமைப்பு நிதி: இந்த ஒப்பந்தத்தின் ஆகப்பெரிய அம்சமாக, போரினால் பாதிக்கப்பட்ட ஈரானின் மறுசீரமைப்புப் பணிகளுக்காக 300 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.28.5 லட்சம் கோடி) மதிப்பிலான சர்வதேச முதலீட்டு நிதியை உருவாக்க அமெரிக்கா உதவ முன்வந்துள்ளது.
இந்த பிரம்மாண்ட நிதி உதவி இறுதி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு வழங்கப்படும் என்றும், இதற்குப் பகரமாக அமெரிக்காவின் எண்ணெய் மற்றும் எரிசக்தி நிறுவனங்கள் ஈரானுக்குள் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இது தவிர, வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள தங்களின் 24 பில்லியன் டாலர் சொத்துக்களை மீட்கவும் ஈரான் முயற்சித்து வருகிறது. இஸ்ரேலுக்கு இதில் உடன்பாடு இல்லை என்றாலும், லெபனான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதும் இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
இருப்பினும், “தங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பிறகே இந்த உடன்பாடு முழுமையானதாகக் கருதப்படும்” என ஈரான் எச்சரிக்கையுடன் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் கத்தார் மூலமாகவே மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளதால், இரு நாடுகளும் ஒரே மாதிரியான வரைவுத் திட்டத்தில் தான் உடன்பட்டுள்ளனவா என்ற கேள்வியும், அதிபர் ட்ரம்ப் இதில் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் உலக அரங்கில் எழுந்துள்ளது.





