தமிழக அரசு அதிரடி: முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை: தமிழகத்தில் நிர்வாக நலன் கருதி முக்கியத் துறைகளின் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அதிரடி மாற்றத்தின்படி, நிதித்துறை செயலராகப் பணியாற்றி வந்த உதயசந்திரன் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக ஐஏஎஸ் சித்திக் நிதித்துறை கூடுதல் தலைமை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், டாஸ்மாக் நிர்வாகத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் மேலாண்மை இயக்குநராக இருந்த டி. கிறிஸ்துராஜ் மாற்றப்பட்டு, அந்தப் பொறுப்பில் கே. நந்தகுமார் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டார். மேலும், வருவாய் நிர்வாக ஆணையராகப் பணியாற்றிய பி. அமுதா மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக முன்னாள் தலைமைச் செயலரான முருகானந்தம், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் புதிய ஆணையராகப் பொறுப்பேற்க உள்ளார். இந்த இடமாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வருவதாக அரசு அறிவித்துள்ளது.





