தமிழக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் விஜய்: 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தை கேட்டார் ஆளுநர்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் (மக்கள் மாளிகை) ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இந்தச் சந்திப்பின்போது, ஆளுநர் விஜய்க்கு சால்வை அணிவித்து வரவேற்றதுடன், மாமல்லபுரம் கடற்கரை கோயில் நினைவுப் பரிசையும் வழங்கினார். அவருடன் கட்சி நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் உடனிருந்தனர்.
சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, புதிய அரசு அமைப்பதற்குத் தேவையான 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தை சமர்ப்பிக்குமாறு விஜயிடம் ஆளுநர் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. தற்போது தவெக-வுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ள போதிலும், அக்கட்சியின் வசம் 112 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு மட்டுமே உள்ளது.
ஆளுநர் மாளிகையிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ பதில் கடிதம் வராததாலும், பெரும்பான்மைக்கு இன்னும் சில இடங்கள் தேவைப்படுவதாலும் விஜய் பதவியேற்பதில் தற்காலிக சிக்கல் ஏற்பட்டுள்ளது. விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது இறுதி முடிவை நாளை அறிவிக்க உள்ள நிலையில், தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்பது சில நாட்கள் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.




