தமிழகத்தில் என்டிஏ கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்: மதுரையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி!
மதுரை:
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தங்களுக்குச் சாதகமாக அமையும் என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யும் என்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்:
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில், தென் மாவட்டங்களுக்கு உட்பட்ட 17 சட்டமன்றத் தொகுதிகளுக்கான பாஜக வாக்கு எண்ணிக்கை முகவர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. மதுரை விமான நிலையம் அருகே உள்ள நாகரத்தினம் அங்கம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இந்தத் கூட்டத்திற்கு, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதில் திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை தெற்கு, ராமநாதபுரம், திருச்செந்தூர், நாகர்கோவில் உள்ளிட்ட 17 தொகுதிகளைச் சேர்ந்த முகவர்கள் கலந்துகொண்டு, வாக்கு எண்ணிக்கையின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசித்தனர்.
வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு உறுதி:
முன்னதாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது:
“தேர்தல் முடிவுகளை நாங்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்தத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறும். தமிழகத்தின் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சியைப் பாதுகாக்க நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம். குறிப்பாக, தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்கள் முன்னுரிமை.”
தமிழக அரசியல் சூழலில் இந்தத் தேர்தல் முடிவுகள் மிக முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும் என அவர் அப்போது குறிப்பிட்டார்.




