இரு அவைகளிலும் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை: பாஜகவின் அரசியல் ஆட்டம்; அச்சத்தில் எதிர்க்கட்சிகள் – சிறப்புத் தொகுப்பு!
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியில் ஏற்பட்டுள்ள திடீர் பிளவும், அதிருப்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ‘நேஷனலிஸ்ட் சிட்டிசன்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா’ (NCPI) கட்சியுடன் இணைந்து ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) ஆதரவு அளித்துள்ளதும் தேசிய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்தத் திடீர் அரசியல் திருப்பம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எந்த வகையில் சாதகமாக அமையப் போகிறது? என்பது குறித்து இந்தச் செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.
நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களுக்கு முன்னதாக, மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை நடவடிக்கையுடனும், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டைச் செயல்படுத்தும் நோக்கோடும் 131-வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவைத் தாக்கல் செய்தது. அப்போது அதற்கு ஆதரவாக 298 வாக்குகளும், எதிராக 238 வாக்குகளும் பதிவான நிலையில், தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் அந்த மசோதா நிறைவேறாமல் போனது.
இந்நிலையில், வரும் ஜூலை 21-ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், அரசியலமைப்புத் திருத்த மசோதா உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்களை மீண்டும் அறிமுகப்படுத்த பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மசோதாக்கள் நிறைவேற நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 3-ல் 2 பங்கு ஆதரவு தேவைப்படும் என்பதால், பல்வேறு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஆதரவைப் பெற பாஜக தீவிர முயற்சியில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு வலுசேர்க்கும் விதமாகவே தற்போது இந்த அரசியல் நகர்வு அரங்கேறியுள்ளது.
மேற்குவங்க அரசியல் மாற்றம் மற்றும் டிஎம்சி-யில் பிளவு!
மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜியின் 15 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, முதல்முறையாக பாஜக ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் கடுமையான உட்கட்சிப் பூசலும் பிளவும் ஏற்பட்டுள்ளது. மம்தாவுக்கு எதிராக 60-க்கும் மேற்பட்ட டிஎம்சி சட்டமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியதைத் தொடர்ந்து, மாநிலங்களவையிலும் (Rajya Sabha) டிஎம்சி உறுப்பினர்கள் 3 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மேலும், மக்களவையிலும் (Lok Sabha) 20 டிஎம்சி உறுப்பினர்கள் மம்தாவுக்கு எதிராகத் திரும்பியுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை, அதிருப்தி டிஎம்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட பட்டியலுடன் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளர்களில் ஒருவரான சுதீப் பந்தோபாத்யாய், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை, மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவின் இல்லத்தில் நடைபெற்ற முக்கியக் கூட்டத்திற்குப் பிறகு, 20 டிஎம்சி அதிருப்தி மக்களவை உறுப்பினர்களில் 19 பேர் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்தனர். தாங்கள் அனைவரும் திரிபுராவைச் சேர்ந்த ‘நேஷனல் சிட்டிசன்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா’ (NCPI) கட்சியுடன் இணையவிருப்பதையும், விரைவில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை (NDA) ஆதரிக்கவிருப்பதையும் தெரிவிக்கும் அதிகாரப்பூர்வக் கடிதத்தை அவர்கள் சபாநாயகரிடம் வழங்கியுள்ளனர்.
சட்டச் சிக்கல்களும் சபாநாயகரின் முடிவும்
இருப்பினும், இந்த 19 அதிருப்தி டிஎம்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ‘என்சிபிஐ’ கட்சியுடனான உள் இணைப்பை (Merger) அங்கீகரிப்பதும், அவையில் ஆளும் தரப்பு வரிசையில் (Treasury Benches) அவர்களுக்குத் தனி இருக்கைகளை வழங்குவதும் சட்டப்படி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் முடிவிலேயே உள்ளது.
மறுபுறம், “சட்டமன்ற அல்லது நாடாளுமன்றக் குழுவை விட, அசல் அரசியல் கட்சிக்கே (Original Political Party) மேலாதிக்கம் உண்டு; அசல் கட்சியே மற்றொரு அமைப்போடு இணையும்போது மட்டுமே முறையான இணைப்பு அங்கீகரிக்கப்படும்” என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய முக்கியத் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, டிஎம்சி பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
பாஜக கூட்டணிக்குக் கிடைத்துள்ள இமாலய பலம்!
டிஎம்சி-யில் ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய பிளவு மற்றும் உட்கட்சிப் பூசல் காரணமாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைத் தொட்டுள்ளது. அதன்படி, மாநிலங்களவையில் பெரும்பான்மைக்குத் தேவையான 163 என்ற எண்ணிக்கையையும், மக்களவையில் 313 என்ற இமாலய எண்ணிக்கையையும் தற்பொழுது பாஜக கூட்டணி பெற்றுள்ளது.
இரு அவைகளிலும் தங்களுக்குக் கிடைத்துள்ள இந்த அசுர பலம் காரணமாக, முடங்கிக் கிடக்கும் தொகுதி மறுவரையறை மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட பல முக்கியமான வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாக்கள், வரும் மழைக்காலக் கூட்டத்தொடரில் எவ்விதத் தடையுமின்றி எளிதாக நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில், பாஜகவின் இந்த அசுர அரசியல் ஆட்டம் எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.




