முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனு: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தள்ளுபடி!
சென்னை:
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
வழக்கின் பின்னணி:
அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, பி. தங்கமணி மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகியோருக்கு எதிராகத் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்கனவே சொத்துக்குவிப்பு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு, அவர்கள் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என திமுக எம்.பி. கிரிராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
நீதிமன்றத்தின் தீர்ப்பு:
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுவை நிராகரித்து முக்கிய கருத்துக்களைத் தெரிவித்தது. ஒரு நபர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதற்காகவே, தானாக முன்வந்து சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிய வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
மேலும், போதுமான ஆதாரங்கள் இருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் திருப்தி அடைந்தால் மட்டுமே அத்துறையால் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும், ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது குறித்து அமலாக்கத்துறையே முடிவு செய்யும் என்றும் தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கை தள்ளுபடி செய்து ஆணையிட்டனர்.





