பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தைத் தகர்க்க முயற்சி: குண்டு வெடித்ததில் மர்ம நபர் பலி!
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்டம் ராஜ்புரா நகருக்கு அருகே, ரயில் தண்டவாளத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்க்க முயன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் நேற்றிரவு அரங்கேறியுள்ளது. தண்டவாளத்தில் வெடிகுண்டை வைக்க முயன்றபோது, அது எதிர்பாராதவிதமாக வெடித்ததில் அந்த முயற்சியில் ஈடுபட்ட நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பாட்டியாலா சரக டி.ஐ.ஜி மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து, உயிரிழந்த நபரின் உடலை மீட்ட காவல்துறையினர், அவரிடமிருந்த சிம் கார்டு மற்றும் சில அறிவியல் ரீதியான ஆதாரங்களைச் சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வெடிவிபத்தில் அதிர்ஷ்டவசமாக வேறு யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும், ரயில் தண்டவாளம் அல்லது பொதுச் சொத்துகளுக்கு எவ்வித சேதமும் உண்டாகவில்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





