இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைத்த திமுக மாநில அரசு
திமுக அரசின் நிர்வாக அலட்சியத்தால் டிஎன்பிஎஸ்சி குரூப்–2 மற்றும் குரூப்–2ஏ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுத் தேர்வுகளை நடத்த தேவையான அடிப்படை வசதிகளையும் சரியாக ஏற்பாடு செய்ய முடியாத அளவிற்கு திமுக அரசு செயலற்ற நிலையில் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
அரசுப் பணியை கனவாகக் கொண்டு, பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து தயாராகி தேர்வு மையங்களுக்கு சென்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கையும் கனவுகளும் இந்த தவறால் சிதைந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவரை இல்லாத இத்தகைய குழப்பம், லஞ்சம் பெற்றே அரசுப் பணிகளை வழங்கியதாக பெயர் பெற்ற திமுக அமைச்சர்களின் நிர்வாகத்தால்தான் ஏற்பட்டதா என்ற சந்தேகம் இயல்பாகவே எழுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லஞ்சமும் ஊழலும் நிறைந்த, நிர்வாகத் திறனற்ற திமுக அரசை நடத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக இளைஞர்களிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.