“முதலமைச்சர் ஸ்டாலின் தவறாக வழிநடத்தப்படுகிறார்” – தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விமர்சனம்!
தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தவறாக வழிநடத்தப்படுகிறார் என்றும், அவர் இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்கிறார் என்றும் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகப் பேசிய அவர், தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான மசோதாக்கள் குறித்து தமிழகமோ அல்லது மற்ற மாநிலங்களோ தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனக் குறிப்பிட்டார். நாட்டின் மக்கள் தொகை மற்றும் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையில், சில தரப்பினர் மக்களைத் தவறாக வழிநடத்தவோ அல்லது திசைதிருப்பவோ முயற்சிப்பதாக அவர் சாடினார்.
மேலும், இந்த நடைமுறையின் மூலம் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும், அனைத்துச் சமூகத்தினருக்கும் நியாயமான வாய்ப்பும், சரியானப் பிரதிநிதித்துவமும் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும் எனத் தெரிவித்த கிரண் ரிஜிஜு, அரசியல் ஆதாயத்திற்காகக் குழப்பத்தை விளைவிக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.




