ஆதரவாளர்களுடன் சசிகலா ஆலோசனை – புதிய அரசியல் கட்சி தொடங்க தயாராகிறாரா?
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், வி.கே. சசிகலா தனியாக புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்த சூழலில், சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வெளியே வந்த வி.கே. சசிகலா, தென் தமிழக மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை போயஸ் கார்டனில் வசித்து வரும் சசிகலா, புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்க உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரது முக்கிய ஆதரவாளர்கள் அவரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அந்த சந்திப்பின்போது, புதிய கட்சி தொடக்கம் தொடர்பான முக்கிய விஷயங்கள் குறித்து சசிகலா விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.