தமிழ்நாட்டில் ரயில்வே, தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் தாமதமாவதற்கு திமுக மாநில அரசே பொறுப்பு – அண்ணாமலை குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் ரயில்வே மற்றும் தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் காலதாமதமாகி வருவதற்கு திமுக மாநில அரசின் செயல்பாடுகளே காரணம் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி வழக்கம்போல உண்மை நிலவரங்களை அறியாமல் கருத்து தெரிவித்து வருவதாகவும், அவரது சகோதரரும் மாநில முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஊழல் சூழ்ந்த நிர்வாகத்தில் தமிழ்நாட்டில் நடைபெறும் விஷயங்கள் அவருக்குத் தெரியாமல் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ரூ.35,701 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ளதாகவும், ஆனால் அவற்றுக்குத் தேவையான நிலம் கையகப்படுத்தும் பணிகளை திமுக அரசு விரைவுபடுத்தாததால், திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டங்களுக்கு தேவைப்படும் மொத்தம் 4,326 ஹெக்டேர் நிலங்களில், 2025 டிசம்பர் நிலவரப்படி, திமுக அரசு வெறும் 24 சதவீத நிலத்தை மட்டுமே கைப்பற்றியுள்ளதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளாக நிலம் கையகப்படுத்தல் காரணமாக பல திட்டங்கள் நிலுவையில் உள்ளதாகவும் அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை திட்டங்களிலும் இதே நிலை தொடர்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஊழல் நிறைந்த திமுக அரசால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தடைகளே, ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படுவதில் பெரும் காலதாமதத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நாள்தோறும் தவறான தகவல்களைப் பரப்புவதைவிட, ஏற்கனவே ஒப்புதல் பெற்ற திட்டங்களை முடிக்க தேவையான நிலங்களை கையகப்படுத்துவதில் ஏன் தாமதம் ஏற்படுகிறது என்பதை கனிமொழி, தனது சகோதரரான முதல்வரிடம் கேட்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.