நிவாரணம் வழங்க இந்திய கம்யூ. வலியுறுத்தல்: தொடர் மழையால் குறுவை பயிர் பாதிப்பு
தென் மேற்கு பருவமழை நிறைவுக்கு முன்பாகவே வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது. வழக்கத்தை விட கூடுதலான மழைப் பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
காவிரி டெல்டா பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் குறுவை அறுவடை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கத்தை விட அதிக பரப்பளவில் செய்யப்பட்ட குறுவை சாகுபடி நல்ல விளைச்சலைத் தந்திருந்தது.
அறுவடை செய்யப்பட்ட நெல், சாலைகளிலும் நேரடி கொள்முதல் மையங்களிலும் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் மூட்டைகள் வரை அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
மழை காரணமாக இந்த நெல் மூட்டைகள் நனைந்து வருகின்றன. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை ரயில் மூலம் வெளியே எடுத்துச் செல்ல வேண்டிய நிலையில், மான லாரிகள் இல்லாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக, விவசாயிகளும் அரசும் பெரும் இழப்பை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எனவே, மாவட்டங்களிலிருந்து போதுமான பொருள் போக்குவரத்து வாகனங்களை வரவழைத்து, கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும்.
அதேபோல், கொள்முதல் நிலையங்களுக்கு வரும் நெல் முழுவதையும் உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அறுவடை செய்யப்பட்ட நெல் மழையில் நனைந்து முளைவிட்டு சேதமடைந்துள்ளதால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு, தமிழக அரசை நிவாரணம் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.