பூண்டி ஏரியில் இருந்து விநாடிக்கு 4,500 கன அடி உபரி நீர் திறப்பு
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான பூண்டி மற்றும் புழல் ஏரிகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில், பூண்டி ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு விநாடிக்கு 4,500 கன அடியாகவும், புழல் ஏரியிலிருந்து விநாடிக்கு 500 கன அடியாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஆந்திர மாநிலத்தின் பள்ளிப்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டப் பகுதிகள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தையொட்டியுள்ள பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இதன் விளைவாக, கொசஸ்தலை ஆறு மற்றும் கல்லாறு வழியாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த வெள்ளநீர், ஆந்திர மாநிலத்தின் கண்டலேறு அணையில் இருந்து வரும் கிருஷ்ணா நீர் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் நீருடன் சேர்ந்து, சென்னை குடிநீர் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு வந்து சேர்கிறது.
பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருந்ததால், பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மதியம் முதல் நீர் வள ஆதாரத் துறையினர் பூண்டி ஏரியில் இருந்து உபரி நீரை கொசஸ்தலை ஆற்றில் திறந்து வருகின்றனர்.
தொடக்கத்தில் விநாடிக்கு 700 கன அடி என திறக்கப்பட்ட உபரி நீரின் அளவு, நேற்று மாலை விநாடிக்கு 1,500 கன அடியாக உயர்த்தப்பட்டது.
நேற்று காலை 6 மணி நிலவரப்படி, 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு மற்றும் 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு 3,081 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம் 34.79 அடியாகவும், நீர் வரத்து விநாடிக்கு 1,810 கன அடியாகவும் இருந்தது.
இந்த நீர் வரத்து, ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அணையில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை விநாடிக்கு 500 கன என திறக்கப்பட்ட உபரிநீரால் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், இன்று காலை 8 மணியளவில் பூண்டி ஏரியிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவை விநாடிக்கு 4,500 கன அடியாக உயர்த்தினர் நீர் வள ஆதாரத் துறையினர்.
அதேபோல், சென்னைக்கு குடிநீர் வழங்கும் மற்றொரு ஏரியான புழல் ஏரி 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவும் 21.20 அடி உயரமும் கொண்டது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் புழல் ஏரிக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று மதியம் முதல் புழல் ஏரியிலிருந்து உபரி நீரை திறந்து வருகின்றனர் நீர் வள ஆதாரத் துறையினர்.
தொடக்கத்தில் விநாடிக்கு 200 கன அடி என திறக்கப்பட்ட உபரி நீர், இன்று காலை 6 மணி நிலவரப்படி, புழல் ஏரியில் 2,980 மில்லியன் கன அடி நீர் இருப்பு மற்றும் 19.84 அடி நீர் மட்டம் உள்ளதால், இன்று காலை 8 மணியளவில் விநாடிக்கு 500 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால், பூண்டி மற்றும் புழல் ஏரிகளிலிருந்து வெளியேறும் உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் சேர்வதால், அதன் இரு கரையோரங்களிலும் புழல் ஏரி உபரி நீர் கால்வாய் ஓரங்களிலும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை மாவட்ட ஆட்சியர் பிரதாப் விடுத்துள்ளார்.