போர்ச்சுகல் தேசிய அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை வெள்ளை மாளிகையில் சந்திக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் செவ்வாயன்று, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மானை அதிபர் ட்ரம்ப் சந்திக்கிறார். அவருக்காக சிறப்பு வரவேற்பும், விருந்தும் ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பில் பாதுகாப்பு மற்றும் அணுசக்தி தொடர்பான முக்கிய உடன்படிக்கைகள் குறித்து இரண்டு நாடுகளும் ஆலோசிக்கத் திட்டமிட்டுள்ளன. 2018க்கு பிறகு முகமது பின் சல்மான் அமெரிக்கா பயணம் செய்யும் இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பின்னணியில், சர்வதேச கால்பந்தின் சூப்பர் ஸ்டாரான ரொனால்டோவும் ட்ரம்ப்பை சந்திக்க இருக்கிறார் என்பதும் வெளியாகியுள்ளது. சவுதி புரோ லீகின் அல் நஸர் அணிக்காக தற்போது ரொனால்டோ விளையாடி வருகிறார். அதனால், ட்ரம்ப்பை சந்திக்க செல்லும் சவுதி பிரதிநிதி குழுவில் அவரும் இருப்பார் என கூறப்படுகிறது.
இதற்கு முன்பு ஒரு நேர்காணலில், ட்ரம்ப்பை நேரில் சந்திக்க விரும்புவதாக ரொனால்டோ பேசியிருந்தார். மேலும், அந்த சந்திப்பு நடைபெறுமானால் அதிபருக்கு தனிப்பட்ட ஒன்றை வழங்க விரும்புகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதே சமயம், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஃபிபா உலகக்கோப்பைக்கு போர்ச்சுகல் அணி சமீபத்தில் தகுதி பெற்றுள்ளது. இந்த உலகக் கோப்பை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது. மொத்தம் 48 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கு இதுவரை 34 நாடுகள் தங்களை தகுதி பெற்றுள்ளன. அதில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, குரோஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், நார்வே, போர்ச்சுகல், ஜெர்மனி, நெதர்லாந்து, அர்ஜென்டினா, பிரேசில், கொலம்பியா, ஈக்குவேடார், பராகுவே, உருகுவே, அல்ஜீரியா, கேப் வர்டி, எகிப்து, கானா, ஐவரி கோஸ்ட், மொரோக்கோ, செனகல், தென் ஆப்பிரிக்கா, துனிசியா, ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், ஜோர்டான், கத்தார், சவுதி அரேபியா, தென் கொரியா, உஸ்பேகிஸ்தான், நியூஸிலாந்து ஆகிய அணிகள் அடங்கும்.