அஜித்குமார் காவல் மரண வழக்கில் குற்றப்பத்திரிகை தாமதம் ஏன்? – சிபிஐ விளக்கம்
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரண வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் தாமதமானது குறித்து, சிபிஐ உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது மரணமடைந்தார். அவரை கம்பால் தாக்கி கொலை செய்ததாக தனிப்படை காவலர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த மரணம் குறித்து அதிமுக வழக்கறிஞர் மாரீஸ்குமார் உட்பட பலர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து, அஜித்குமார் காவல் மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் குமரப்பன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. சிபிஐ சார்பில், விசாரணை முன்னேற்றம் குறித்து மூடிமுத்திரையிட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மனுதாரர் தரப்பில், “உயர் நீதிமன்றம் முன்பே சிபிஐக்கு குறிப்பிட்ட காலக்கெடு வழங்கியிருந்தாலும், அதற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை,” என குற்றஞ்சாட்டப்பட்டது.
இதற்கு பதிலளித்த சிபிஐ தரப்பில்,
“ஹைதராபாத் மத்திய தடயவியல் ஆய்வகத்திலிருந்து அறிக்கை வந்துள்ளது. ஆனால் டெல்லி தடயவியல் ஆய்வகத்தின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. அந்த முடிவுகள் கிடைத்த பின்னரே யார், யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதில் தெளிவு பெற முடியும். அதன்பின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். எனவே சிறிது அவகாசம் தேவை,”
என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள்,
“முன்பே 6 வார அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் அவகாசம் கேட்பது ஏற்றுக்கொள்ள முடியாது,”
என்று குறிப்பிட்டனர். மேலும்,
“டெல்லி தடயவியல் ஆய்வகத்தை எதிர் மனுதாரராக நீதிமன்றம் தானாக இணைக்கிறது. அஜித்குமார் மரணம் தொடர்பான ஆய்வு முடிவுகளை 3 வாரங்களுக்குள் சிபிஐக்கு வழங்க வேண்டும்,”
என்றும் உத்தரவிட்டனர்.
இதற்கிடையில், வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நவம்பர் 27-க்கு ஒத்திவைக்கப்பட்டது.