ஒடிசாவில் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன ருத்ரம்-2 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிறைவு!
சந்திபூர்:
ஒடிசா மாநிலம் சந்திபூரில் முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட அதிநவீன ‘ருத்ரம்-2’ ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. வானிலிருந்து பாய்ந்து சென்று தரையில் உள்ள இலக்குகளை மிகவும் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன்வாய்ந்த இந்த ஏவுகணை, எதிரி நாடுகளின் ரேடியோ அலைவரிசை மற்றும் ரேடார் சிக்னல்களை சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தே கண்டறியும் அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டது.
சந்திபூர் ஏவுதளத்திலிருந்து செலுத்தப்பட்ட இந்த ஏவுகணை, திட்டமிட்டபடி குறித்த நேரத்தில் இலக்கைச் சென்றடைந்து துல்லியமாகத் தாக்கியதாகப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. நாட்டின் பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் இந்த ருத்ரம்-2 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.






