தமிழக அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம்: விசிக, ஐ.யு.எம்.எல் இன்று அமைச்சரவையில் ஏற்பு – வன்னியரசு, ஷாஜகான் அமைச்சர்களாகப் பதவியேற்பு!
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு முதன்முறையாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யு.எம்.எல்) ஆகிய கட்சிகள் தமிழக அமைச்சரவையில் அதிகாரப்பூர்வமாக இடம்பெறவுள்ளன. அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக), தங்களது கூட்டணிக் கட்சிகளான விசிக மற்றும் ஐ.யு.எம்.எல் ஆகியவற்றுக்கு அமைச்சரவையில் பங்கேற்குமாறு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்திருந்தது. இந்த அழைப்பைத் தொடர்ந்து, இரு கட்சிகளின் தலைமையிலும் நடத்தப்பட்ட தீவிர ஆலோசனைக்குப் பிறகு, தவெக தலைமையிலான புதிய அமைச்சரவையில் இணைவது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, விசிக சட்டமன்ற உறுப்பினரான வன்னியரசு மற்றும் ஐ.யு.எம்.எல் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான ஷாஜகான் ஆகியோர் இன்று புதிய அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளனர். சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகையான ‘மக்கள் மாளிகையில்’ நடைபெறும் பிரம்மாண்ட விழாவில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இருவருக்கும் புதிய அமைச்சர்களுக்கான பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்க உள்ளார். தமிழக அரசியல் வரலாற்றிலேயே விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய இயக்கங்கள் நேரடியாக அரசு நிர்வாகத்தில் பங்கேற்று அமைச்சர் பதவிகளைப் பெறுவது இதுவே முதல் முறை என்பதால், இன்றைய பதவியேற்பு விழா அரசியல் அரங்கில் மிக முக்கியப் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.




