8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைக்கான விதிமுறைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அரசு ஊழியர்களின் ஊதியமும், ஓய்வூதியச் சலுகைகளும் தொடர்பாக பரிந்துரைகள் வழங்கும் 8-வது ஊதியக்குழுவின் விதிமுறைகள் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மத்திய அரசு, மத்திய ஊழியர்களின் சம்பளம் மற்றும் பல்வேறு சலுகைகளில் மாற்றங்களை ஆய்வு செய்து பரிந்துரைக்க 8-வது ஊதியக்குழுவை அமைக்க தீர்மானித்தது. குழு நியமிக்கப்பட்ட தேதியிலிருந்து 18 மாதங்களுக்குள் தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் குழுவின் தலைவராகவும், ஐஐஎம் பெங்களூரு பேராசிரியர் புலக் கோஷ் பகுதிநேர உறுப்பினராகவும், பெட்ரோலியத் துறை செயலாளர் பங்கஜ் ஜெயின் உறுப்பினர் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்ததின்படி, 8-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் 2026 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் வாய்ப்புள்ளது.
இந்தக் குழு தனது பரிந்துரைகளை வழங்கும்போது, நாட்டின் பொருளாதார நிலைமை, நிதி தேவைகள், வளர்ச்சி செலவுகள், நலத்திட்ட நிதி, ஓய்வூதியச் செலவுகள், மாநில நிதிநிலை, மத்திய பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஊதிய அமைப்பு, சலுகைகள், பணி நிலைமைகள் போன்ற அம்சங்களையும் கருத்தில் கொள்ளும்.
அமைச்சரவை அங்கீகாரம் பெற்றதன் மூலம், சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 69 லட்சம் ஓய்வூதியதாரர்களும் இப்பரிந்துரைகளால் நேரடி நன்மை பெறவுள்ளனர்.