புதுச்சேரியின் 16-வது முதலமைச்சராக என். ரங்கசாமி பதவியேற்பு: நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் அமைச்சர்களாகப் பொறுப்பேற்பு!
புதுச்சேரி: புதுச்சேரியின் 16-வது சட்டப்பேரவைக்கான புதிய முதலமைச்சராக அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் தலைவர் என். ரங்கசாமி இன்று முறைப்படி பதவியேற்றுக்கொண்டார்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவராக என். ரங்கசாமி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய அவர், தனது அமைச்சரவைப் பட்டியலை வழங்கினார். அதன்படி, இன்று புதுச்சேரி மக்கள் மாளிகையில் நடைபெற்ற சிறப்பான விழாவில், ரங்கசாமிக்குத் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
முதலமைச்சர் ரங்கசாமியுடன் சேர்த்து, பாஜக-வின் நமச்சிவாயம் மற்றும் என்.ஆர். காங்கிரஸின் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோரும் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக்கொண்டனர். இந்த விழாவில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மாநிலத் தலைவர் வி.பி. ராமலிங்கம் மற்றும் என்.ஆர். காங்கிரஸ், அதிமுக, லட்சிய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.




