சந்தானம் பட பாணியில் ‘இளநீர்’ போராட்டம்: ஜன்னல் கம்பியில் சிக்கிய இளநீரை மீட்ட இளைஞரின் வீடியோ வைரல்!
சமூக வலைதளம்: திரைப்படங்களில் வரும் நகைச்சுவைக் காட்சிகளை நிஜ வாழ்க்கையில் பார்ப்பது அரிது. ஆனால், நடிகர் சந்தானம் ஒரு திரைப்படத்தில் ஜன்னல் கம்பிகளுக்கு இடையே சிக்கிய இளநீரை எடுக்கப் போராடுவது போன்ற ஒரு காட்சி, நிஜமாகவே ஒரு ரயிலில் அரங்கேறியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
ஈகோவை சீண்டிய சிரிப்பு:
ரயிலில் பயணம் செய்த இளைஞர் ஒருவர், தாகத்திற்காக இளநீர் வாங்கியுள்ளார். எதிர்பாராதவிதமாக அந்த இளநீர் ரயிலின் ஜன்னல் கம்பிகளுக்கு இடையே சிக்கிக்கொண்டது. அவர் எவ்வளவு முயன்றும் அதை உள்ளே இழுக்க முடியவில்லை. இந்த வேடிக்கையான சூழலைப் பார்த்த அருகில் இருந்த பெண் ஒருவர், அந்த இளைஞரின் நிலைமையைக் கண்டு கிண்டலாகச் சிரித்துள்ளார். அந்தப் பெண்ணின் சிரிப்பு இளைஞரின் தன்மானத்தைச் சீண்ட, “இதை எடுத்தே தீருவேன்” என அவர் களத்தில் இறங்கினார்.
அதிரடி மீட்பு நடவடிக்கை:
உடனடியாக தனது கழுத்தில் இருந்த சால்வை மற்றும் தலையில் இருந்த தொப்பியைத் தூக்கி எறிந்த அந்த இளைஞர், தனது முழு பலத்தையும் திரட்டி இளநீரை உள்ளே இழுக்கப் போராடினார். சில நிமிடத் தீவிரப் போராட்டத்திற்குப் பிறகு, ஒருவழியாக இளநீரை ஜன்னலுக்குள் மீட்டெடுத்தார். வெற்றியின் அடையாளமாக அந்த இளநீரைத் தூக்கிக் காட்டியதோடு மட்டுமல்லாமல், தன்னைப்பார்த்துச் சிரித்த அந்தப் பெண்ணிடமே பெருந்தன்மையுடன் அதைக் குடிக்கக் கொடுத்தார்.
இந்த கலகலப்பான வீடியோவை இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். “நிஜமாவே இது ஒரு படக் காட்சி போலவே இருக்கிறது” என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.