சைதாப்பேட்டை அருகே அரசு பேருந்து – லாரி மோதி விபத்து: அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்!
சென்னை சைதாப்பேட்டை 3-வது பிரதான சாலை அருகே மாநகர அரசு பேருந்தும், கனரக வாகனம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது. தியாகராய நகரிலிருந்து வந்த மாநகரப் பேருந்தும், பல்லாவரத்திலிருந்து வந்த கனரக வாகனமும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கனரக வாகனத்தை ஓட்டி வந்த ஜீவன் ராஜ் என்ற இளைஞர் காயமடைந்தார். நல்வாய்ப்பாக, அரசு பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போக்குவரத்து காவல்துறையினர், விபத்துக்குள்ளான வாகனங்களை அகற்றி போக்குவரத்தைச் சீர்செய்தனர்.