தென் மாவட்டங்களில் கோலாகலமான அய்யா வைகுண்டர் 194-வது அவதார தினவிழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு!
திருச்செந்தூர்/நாகர்கோவில்: சமூகப் புரட்சியாளர் அய்யா வைகுண்டரின் 194-வது அவதார தினவிழா, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று பக்திப் பெருக்குடன் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில், அதிகாலை முதலே சிறப்புப் பணிவிடைகள் தொடங்கின. அய்யாவுக்குத் தாலாட்டுப் பாடுதல், அபயம் பாடுதல் மற்றும் பள்ளி உணர்த்தல் நிகழ்வுகளைத் தொடர்ந்து, சூரிய உதயத்தின் போது பள்ளியரையில் உள்ள பணிவிடைப் பொருட்களுக்குக் கடலில் ‘பதமிடுதல்’ நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, ‘அய்யா சிவசிவ அரகரா’ என்ற பக்தி முழக்கத்துடன் சூரிய உதயத்தின் போது மலர் தூவி வழிபாடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து உகம்பெருக்குதல் மற்றும் அன்ன தர்மம் உள்ளிட்ட நிகழ்வுகள் அவதாரபதியில் நடைபெற்றன.
இதேபோல், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து அய்யா வைகுண்டரின் தலைமைப் பதியான சுவாமிதோப்புக்கு மாபெரும் அவதார தின ஊர்வலம் நடைபெற்றது. பக்தர்கள் காவி கொடி ஏந்தியபடி, மேளம் முழங்க அய்யா இயற்றிய ‘திரு ஏட்டை’ வாசித்தவாறு ஊர்வலமாகச் சென்றனர். இந்த முக்கிய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், அய்யா வைகுண்டரின் அவதாரத் திருநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளிலும் ஊர்வலங்களிலும் பங்கேற்றுத் தங்களின் பக்தியை வெளிப்படுத்தினர்.