புதுச்சேரியில் ‘பிஎம் இ-பஸ் சேவா’: 11 மின் பேருந்து சேவைகளைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
புதுச்சேரி: நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்தை நவீனப்படுத்தவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சாரப் போக்குவரத்து முறையை (Green Mobility) ஊக்குவிக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ‘பிஎம் இ-பஸ் சேவா’ (PM-eBus Sewa) திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 11 மின் பேருந்துகளின் சேவையைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் சுமார் 10,000 மின்சாரப் பேருந்துகளை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இத்திட்டத்தைச் செயல்படுத்த மூன்று முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், ‘ஈகா மொபைலிட்டி’ நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 9 மீட்டர் நீளம் கொண்ட இந்த அதிநவீன மின் பேருந்துகள், புதுச்சேரி சாலைகளில் இனி இயங்கவுள்ளன.
மின்சாரப் பேருந்துகளின் வருகையால் காற்று மாசுபாடு குறைவதோடு, பயணிகளுக்குக் சத்தமில்லாத, வசதியான பயண அனுபவம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுச்சேரியின் உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வளர்ச்சியில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.