“இரட்டை எஞ்சின் அரசால் புதுச்சேரி பொற்காலத்தை எட்டும்” – பிரதமர் மோடி பெருமிதம்!
புதுச்சேரி: மத்திய அரசும், யூனியன் பிரதேச அரசும் இணைந்து செயல்படும் ‘இரட்டை எஞ்சின்’ ஆட்சியால் புதுச்சேரி மாநிலம் மேலும் அபரிமிதமான வளர்ச்சியைப் பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார். புதுச்சேரி லாஸ்பேட்டை மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் பங்கேற்ற பிரதமர், சுமார் 2700 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்ததுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.
விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, “அனைவருக்கும் வணக்கம்” என்று தமிழில் கூறி தனது உரையைத் தொடங்கினார். சித்தர்களும், கவிஞர்களும் வாழ்ந்த இந்தப் புண்ணிய பூமியில், மகாகவி பாரதியார் தேசியவாதத்தின் நெருப்பை இங்கிருந்துதான் மூட்டினார் என்று புகழாரம் சூட்டினார். கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சி புதுச்சேரியைத் டெல்லியில் உள்ள ஒரு தனிப்பட்ட குடும்பத்தின் ‘ஏடிஎம்’ (ATM) போலப் பயன்படுத்தியதாகக் கடுமையாகச் சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் திமுகவின் ஊழல் பட்டியல் நீண்டு கொண்டே போவதாகக் குறிப்பிட்டதுடன், காங்கிரஸும் திமுகவும் புதுச்சேரியின் வளர்ச்சிப் பயணத்தில் தடையாக இருந்ததாகக் குற்றம் சாட்டினார். ஊழல் மற்றும் குற்றச்செயல்கள் மிகுந்த அந்தச் சக்திகள் மீண்டும் அதிகாரத்திற்கு வரத் துடிப்பதாகவும், ஆனால் புதுச்சேரி மக்கள் அத்தகைய சக்திகளை ஒருபோதும் விரும்ப மாட்டார்கள் என்றும் பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார். மத்திய-மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த செயல்பாடே புதுச்சேரியின் முன்னேற்றத்திற்கு அச்சாணி என்றும் அவர் தெரிவித்தார்.