“பாஜகவினரைத் தடுத்து விரட்டுங்கள்” – தூத்துக்குடி மேயர் ஜெகன் பேசிய மிரட்டல் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது!
தூத்துக்குடி: தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளிடையே பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தூத்துக்குடியில் திமுக மற்றும் பாஜகவினரிடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் பாஜகவினர் நடத்தி வரும் தெருமுனைப் பிரசாரக் கூட்டங்களில், திமுக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது திமுகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில், அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்ற ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், “பாஜகவினர் தெருமுனைப் பிரசாரக் கூட்டங்களை நடத்த அனுமதிக்கக் கூடாது. அவர்கள் கூட்டத்தை நடத்த முற்பட்டால், பொதுமக்கள் ஒன்றுதிரண்டு அவர்களைத் தடுத்து விரட்டியடிக்க வேண்டும்” என்று மிரட்டும் தொனியில் பேசினார். ஜனநாயக ரீதியாகப் பிரசாரம் செய்ய முற்படும் எதிர்க்கட்சியினரை மிரட்டும் வகையில் மேயர் பேசியுள்ள இந்த விவகாரம், தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதற்கு பாஜக தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.