தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட ₹23 கோடி மதிப்பிலான கஞ்சா டெல்லியில் பறிமுதல்
புதுடெல்லி: தாய்லாந்தின் கிராபி நகரிலிருந்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு இண்டிகோ விமானம் மூலம் கடந்த 22-ஆம் தேதி வந்திறங்கிய பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த இரண்டு இந்தியப் பயணிகளின் உடைமைகளை ஆய்வு செய்தபோது, பிளாஸ்டிக் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 24 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு சுமார் 23 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, கடத்தப்பட்ட போதைப்பொருளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.