ஈரோடு: அரசு அலுவலகத்தில் அரங்கேறிய ‘பஞ்சாயத்து’ – திமுக நிர்வாகியின் செயலால் பரபரப்பு
ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட திமுக கவுன்சிலரின் மகனையும், பாதிக்கப்பட்ட பொதுமக்களையும் மாநகராட்சி அலுவலகத்திற்கே வரவழைத்து திமுக நிர்வாகி ஒருவர் பஞ்சாயத்து செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாநகராட்சி திமுக கவுன்சிலர் மோகனாவின் மகன் கதிர் என்பவர், கடந்த 2024-ஆம் ஆண்டு வளையக்கார வீதி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில், விவகாரம் மாநகராட்சி அலுவலகத்திற்குச் சென்றுள்ளது.
மாநகராட்சி மேயர் நாகரத்தினத்தின் அறையிலேயே, அவரது கணவரும் திமுக மாநகர செயலாளருமான சுப்பிரமணியன், பாதிக்கப்பட்ட மக்களையும் மோசடி புகாருக்குள்ளான கதிரையும் வரவழைத்து கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டுள்ளார். இந்தச் சந்திப்பின் முடிவில், தனது சொத்துக்களை விற்று பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணத்தைத் திருப்பித் தருவதாக கதிர் சம்மதித்ததாகத் தெரிகிறது. தேர்தல் நெருங்கும் வேளையில், பொறுப்புமிக்க அரசு அலுவலகத்தைப் பயன்படுத்தி திமுக நிர்வாகி இவ்வாறு அத்துமீறிச் செயல்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.