“சொன்னதைச் செய்யும் கட்சி அதிமுக” – குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹10,000 வாக்குறுதிக்கு மக்கள் வரவேற்பு என ஜெயக்குமார் பேச்சு!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடும்ப அட்டைதாரர்களுக்கு 10,000 ரூபாய் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி, மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுகவைப் போலத் தேர்தலின் போது வாக்குறுதிகளை அளித்துவிட்டு, பின்னர் மக்களை ஏமாற்றும் கட்சி அதிமுக அல்ல என்று கடுமையாக விமர்சித்தார். வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன், அறிவிக்கப்பட்ட அனைத்துத் தேர்தல் வாக்குறுதிகளும் தடையின்றி நிறைவேற்றப்படும் என்று அவர் உறுதிப்படத் தெரிவித்தார். அதிமுகவின் இந்த அதிரடி அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.