அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது குவியும் அதிருப்தி: கருத்துக்கணிப்பில் வெளியான அதிரடித் தகவல்கள்!
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து அந்நாட்டு மக்கள் பெரும்பான்மையானோர் கடும் அதிருப்தியில் இருப்பது சமீபத்திய ஊடகக் கருத்துக்கணிப்புகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஏபிசி நியூஸ் (ABC News) மற்றும் வாஷிங்டன் போஸ்ட் (Washington Post) இணைந்து நடத்திய ஆய்வில், டிரம்பின் பொருளாதாரக் கொள்கைகள் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளன. குறிப்பாக, பணவீக்கத்தைக் கையாள்வதில் டிரம்ப் தோல்வியடைந்துள்ளதாக 65% அமெரிக்கர்கள் கருதுகின்றனர். அதேபோல், அவரது வரி விதிப்புக் கொள்கைகளுக்கு 64% மக்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
நிர்வாக ரீதியான முடிவுகள் மட்டுமன்றி, டிரம்பின் வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் சர்வதேச உறவுகளையும் 62% மக்கள் அங்கீகரிக்கவில்லை. குடியேற்றக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த ராணுவத்தைப் பயன்படுத்தும் அவரது திட்டத்திற்கு 54% பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, Yahoo மற்றும் YouGov நடத்திய மற்றொரு ஆய்வில், அமெரிக்க வரலாற்றிலேயே ‘மிக மோசமான அதிபர்’ என 40% மக்களால் டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரது ஒட்டுமொத்த அங்கீகார விகிதம் 39% ஆக சரிந்துள்ள நிலையில், வெறும் 12% பேர் மட்டுமே அவரை ஒரு சிறந்த அதிபர் என்று ஏற்றுக்கொள்கின்றனர். இந்தத் தரவுகள் டிரம்ப் நிர்வாகத்திற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.