சத்தீஸ்கரில் நக்சல் ஆதிக்கம் ஒழிப்பு: சுதந்திரத்திற்குப் பின் முதன்முறையாக மின்சாரம் பெற்ற கோகுண்டா கிராமம்!
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள கோகுண்டா கிராமம், பல தசாப்தங்களாக நக்சல்களின் பிடியில் சிக்கித் தவித்த நிலையில், தற்போது மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது. இதன் விளைவாக, அந்த கிராமத்திற்கு வரலாற்றிலேயே முதன்முறையாக மின்சார வசதி கிடைத்துள்ளது. அடர்ந்த காடுகள் மற்றும் சவாலான நிலப்பரப்பைக் கொண்ட இப்பகுதி, நீண்ட காலமாக மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இருந்ததால் சாலை, மின்சாரம் மற்றும் மருத்துவம் போன்ற எந்தவொரு அடிப்படை வசதிகளுமின்றி இருளில் மூழ்கிக் கிடந்தது.
தற்போது பாதுகாப்புப் படையினரின் தீவிர முயற்சியால் நக்சல்கள் ஒழிக்கப்பட்டு, அங்கு வளர்ச்சிப் பணிகள் வேகமெடுத்துள்ளன. பாதுகாப்புப் படையினரின் நேரடிப் பாதுகாப்பின் கீழ், கடினமான வனப்பகுதிகளுக்கு இடையே மின் கம்பங்கள் நடப்பட்டு கிராமத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தால் மகிழ்ச்சி அடைந்துள்ள கிராம மக்கள், மின்சார வசதி கிடைத்துள்ளதன் மூலம் தங்கள் கிராமத்தில் கல்வி, மருத்துவம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் மேம்படும் என்றும், இது தங்கள் வாழ்வாதாரத்தில் புதிய விடியலை ஏற்படுத்தும் என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.