ஜெயலலிதா பிறந்தநாள் விழா: சேலத்தில் 78 கிலோ கேக் வெட்டி அதிமுகவினர் உற்சாகக் கொண்டாட்டம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பிரம்மாண்டக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதையொட்டி, சேலம் அண்ணா பூங்காவில் உள்ள மணிமண்டபத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக, நான்கு ரோடு பகுதியிலிருந்து கட்சியினர் திரளாகப் பங்கேற்ற எழுச்சிப் பேரணி நடைபெற்றது.
இந்த விழாவின் சிறப்பம்சமாக, ஜெயலலிதாவின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் 78 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட கேக் வெட்டப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது, வரும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை வெற்றிபெறச் செய்து, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக அரியணையில் அமர்த்த அதிமுகவினர் ஒன்றிணைந்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.