மதுரையில் போஸ்டர் யுத்தம்: “கொள்ளைக்காரர்களிடம் அடிபணிவோமா?” – திமுகவை மறைமுகமாகச் சீண்டும் காங்கிரஸ்!
தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் இடையே ‘ஆட்சியில் பங்கு’ குறித்த விவாதம் முற்றியுள்ள நிலையில், மதுரையில் காங்கிரஸ் கட்சியினர் ஒட்டியுள்ள போஸ்டர்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. “ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்திற்கு ஒத்துவராது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தது கூட்டணிக் கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், மதுரையின் முக்கியப் பகுதிகளில் காங்கிரஸ் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், “வெள்ளைக்காரனையே விரட்டியடித்த காங்கிரஸார், இந்த கொள்ளைக்காரர்களிடம் அடிபணிவோமா?” என்ற காரசாரமான வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், இது திமுகவை நோக்கிய மறைமுக விமர்சனம் என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இந்த போஸ்டர்களில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏற்கனவே இரு கட்சித் தலைவர்களிடையே வார்த்தைப் போர் நிலவி வரும் சூழலில், மதுரையில் ஒட்டப்பட்டுள்ள இந்த ‘கொள்ளைக்காரர்’ போஸ்டர் திமுகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் ஒருமைப்பாட்டில் விரிசல் விழுந்துள்ளதைக் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.