தேர்தல் ஆணைய உத்தரவு: தடை கோரிய மனு நிராகரம்
சென்னை: சில அரசியல் கட்சிகளின் பதிவுகளை நீக்கிய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
தொடர்ந்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாதது உள்ளிட்ட விதிமுறைகள் மீறப்பட்டதாகக் கூறி, நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட 474 அரசியல் கட்சிகளின் பதிவுகளை இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் ரத்து செய்தது. தமிழகத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட 42 கட்சிகளின் பதிவுகள் நீக்கப்பட்டன.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள் முருகன் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க இயலாது என தெரிவித்தனர்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் மாதம் இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.