மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீடு: சட்டசபையில் கடும் வாக்குவாதம்
சென்னை: மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த விவகாரம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ஆளுநர் மாளிகை முன்பு திமுக நடத்திய போராட்டத்தின் விளைவாகவே 7.5 சதவீத இடஒதுக்கீடு சட்டமாகியது என தெரிவித்தார். இதற்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இந்த இடஒதுக்கீட்டை திமுக வலியுறுத்தியது என்பது தவறான தகவல் எனக் கூறி, சட்டப்பேரவையில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் பேசப்படுவதாக குற்றம்சாட்டினார்.
முன்னதாக பேசிய அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி, தமிழகத்தின் கடன் சுமை 10 லட்சம் கோடியை கடந்துள்ளதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 5.5 லட்சம் கோடி அளவுக்கு கடன் உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் அரசின் நிதி மேலாண்மை பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் விமர்சித்தார்.
மேலும், பொருளாதார வளர்ச்சி அதிகரித்தாலும் தமிழகத்தில் கடன் சுமை தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும், இதனை மறைக்க திமுக அரசு ஊடகங்களில் போலியான விளம்பரங்களை செய்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுகவின் போராட்டமே இடஒதுக்கீடு சட்டமாக காரணம் என மீண்டும் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமிதான் என கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
அமைச்சரின் பேச்சை கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால், சட்டசபையில் காரசாரமான விவாதம் நிலவியது.