ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடத்தத் திட்டம் – தேர்தல் ஆணையம்
தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 17ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளன. அதில் தமிழகமும் முக்கியமாக இடம்பெறுகிறது.
தற்போது செயல்பட்டு வரும் திமுக அரசின் பதவிக்காலம் மே 10ஆம் தேதியுடன் முடிவடைவதால், அதற்கு முன்பாகவே தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால், தேர்தல் அட்டவணை இம்மாதம் முடிவில் அல்லது வருகிற மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இறுதி வாக்காளர் பட்டியல் நிலவரம்
இதற்கிடையில், தமிழகத்தில் நடைப்பெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளின் போது சுமார் 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில், மரணமடைந்தவர்கள் மற்றும் இரட்டை பதிவில் உள்ளவர்கள் தவிர, முகவரி மாற்றம் செய்தவர்கள் உரிய சான்றுகளுடன் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இதுவரை சுமார் 20 லட்சம் பேர் மீண்டும் தங்கள் பெயர்களை சேர்க்க விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், வரும் 17ஆம் தேதி வெளியிடப்பட உள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றவர்களே வரவிருக்கும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பெறுவார்கள்.
தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் நாள் எப்போது?
தேர்தலுக்கான நிர்வாக ஏற்பாடுகள் ஒருபுறம் நடைபெற, மறுபுறம் இந்திய தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு தொடர்பான பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த சூழலில், நாளை (புதன்கிழமை) துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு சென்னை வருகை தர உள்ளார். அவர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்காளர்களின் எண்ணிக்கை குறித்த ஆய்வையும் மேற்கொள்ள உள்ளார்.
ஐந்து மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை பல கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதில் இரண்டாவது கட்டத்தில் தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் என டெல்லி வட்டார தகவல்கள் கூறுகின்றன.
அதன்படி, ஏப்ரல் மாதத்தின் இரண்டாவது வாரத்தில், குறிப்பாக ஏப்ரல் 13ஆம் தேதி, தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.