கார் தொழிற்சாலை திறப்பு விழாவில் அமைச்சர் புறக்கணிப்பு? – முதலமைச்சரின் வேறுபட்ட நடை சர்ச்சைக்கு காரணம்
ராணிப்பேட்டையில் நடைபெற்ற ஒரு அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் காந்தியை சந்திக்காமல் வேறு வழியாக சென்ற சம்பவம் அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை எழுப்பியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில், சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அமைத்துள்ள கார் தயாரிப்பு தொழிற்சாலை அண்மையில் நிறைவடைந்துள்ளது.
இந்த ஆலையை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு வந்திருந்தார். அவரை வரவேற்க அமைச்சர் காந்தி நிகழ்ச்சி வளாகத்தில் காத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவரை சந்திக்காமல், முதலமைச்சர் வேறு பாதையில் சென்று நேரடியாக வளாகத்துக்குள் நுழைந்து தொழிற்சாலையை திறந்து வைத்தார்.
இதற்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொண்டபோது, அதில் அமைச்சர் காந்தி பங்கேற்காதிருந்த நிலையில், தற்போது நடந்த இந்த சம்பவம் கூடுதல் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
பின்னர் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், இந்த கார் உற்பத்தி தொழிற்சாலை நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் முக்கிய பங்காற்றும் என தெரிவித்தார்.