அங்கன்வாடி சத்துணவு பணியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு – நேரில் சந்தித்த எஸ்.பி.வேலுமணி
கோவையில் தொடர்ந்து ஏழாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அங்கன்வாடி சத்துணவு ஊழியர்களை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் சந்தித்து, தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோவை மாநகரில் அங்கன்வாடி பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஏழு நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஊழியர்களை சந்தித்த எஸ்.பி.வேலுமணி, அவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக பேசினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது திமுக அளித்த பல வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என குற்றம்சாட்டினார்.
மேலும், வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் அங்கன்வாடி ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அங்கன்வாடி ஊழியர்களுடன் அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், அவர்களின் போராட்டத்தை புறக்கணிப்பது நியாயமற்ற நடவடிக்கை என்றும் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தினார்.