உதகை ரேஸ் கிளப்பில் பூங்கா வேண்டாம் – பன்னடுக்கு பார்க்கிங் அமைக்க மக்கள் வலியுறுத்தல்
உதகை நகரின் மையத்தில் அமைந்துள்ள ரேஸ் கிளப்பிலிருந்து மீட்கப்பட்ட நிலப்பரப்பில் சூழலியல் பூங்கா அமைக்க அரசால் எடுக்கப்பட்ட முடிவுக்கு, அப்பகுதி குடியிருப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நகரில் நீண்ட காலமாக நீடித்து வரும் போக்குவரத்து சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், அந்த இடத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
இயற்கை அழகில் சிறந்து விளங்கும் நீலகிரி மாவட்டம், தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்த்து வருகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து தனியார் வாகனங்களிலும், சுற்றுலா பேருந்துகளிலும் உதகைக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இட வசதி இல்லாததால், சாலைகளின் ஓரங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டிய சூழல் உருவாகி, அதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வரி செலுத்தப்படாத காரணத்தால் அரசால் கைப்பற்றப்பட்ட உதகை மையப்பகுதியில் உள்ள குதிரைப் பந்தய மைதானத்தில், வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்கு பதிலாக பூங்கா உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு, உள்ளூர் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
உதகை நகரில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், உலகப்புகழ் பெற்ற அரசு தாவரவியல் பூங்கா, நூற்றாண்டு ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, மரவியல் பூங்கா, கர்நாடக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கர்நாடக பூங்கா உள்ளிட்ட பல பூங்காக்கள் ஏற்கனவே உள்ளன. இதற்கு மேலாக, உதகை நகராட்சி நிர்வாகத்தின் கீழ் சுமார் பத்து மற்றும் அதற்கு மேற்பட்ட சாலையோர பூங்காக்களும் செயல்பட்டு வருகின்றன. இவ்வளவு பூங்காக்கள் இருக்கும் சூழலில், மேலும் ஒரு பூங்கா தேவையற்றது என்றும், அந்த நிலத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பன்னடுக்கு பார்க்கிங் அமைப்பதே நகர வளர்ச்சிக்கு உகந்தது என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சுற்றுலா பகுதிகளில் சூழலியல் பூங்காக்கள் அவசியமானவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றாலும், தற்போதைய சூழலில் உதகை நகரை வாட்டி வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு உடனடி தீர்வு அளிக்கும் வகையில் வாகன நிறுத்துமிடம் அமைப்பதே சிறந்த முடிவாக இருக்கும் என்பதே உதகை பகுதி மக்களின் ஒருமித்த நிலைப்பாடாக உள்ளது