தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கோயில்கள் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளன – விஹெச்பி குற்றச்சாட்டு
திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள விஷ்வ ஹிந்து பரிஷத் அலுவலகத்தில், உலக இந்து கல்வியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு மட்டுமல்லாமல், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து முனைவர் பட்டம் பெற்ற இந்து அறிஞர்கள் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கின் போது, தமிழகத்தில் இந்து ஆலயங்களின் தற்போதைய நிலை மற்றும் இந்து சமூகத்தின் சூழ்நிலை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதேபோல், இந்து மதக் கோட்பாடுகள் மற்றும் அதற்கு எதிராக செயல்படுவதாக கூறப்படும் திராவிட ஆட்சியின் நிலைப்பாடுகள் பற்றியும் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, நான்கு வேதங்களின் முக்கியத்துவம் குறித்து சுவாமி ராமகிருஷ்ணன் சிறப்பு உரை நிகழ்த்தினார்.
பின்னர் ஊடகங்களை சந்தித்த விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அகில பாரத இணை பொதுச் செயலாளர் ஸ்ரீமான் ஸ்தான மாலையான், தமிழகத்தில் நூற்றுக்கும் அதிகமான கோயில்கள் முறையான பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கின்றன என கடுமையாக குற்றம்சாட்டினார்.