கூட்டணிக்குள் கூடுதல் தொகுதி கோரிக்கைகள் – அழுத்தத்தில் திமுக
கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் அதிக தொகுதிகளை கோரி வலியுறுத்தி வரும் நிலையில், தொகுதி பங்கீட்டுக்கான குழுவை அமைக்காமல் திமுக அமைதி காக்கும் போக்கு, கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகளை உருவாக்கியுள்ளது.
வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, தவெக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முக்கிய அரசியல் அணிகள் மோதும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில், திமுகவும் அதிமுகவும் தங்களது கூட்டணிகளை பலப்படுத்த பிற கட்சிகளை இணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் போது, திமுக தலைமையிலான கூட்டணிக்குள் கடந்த சில நாட்களாக மறைமுக மோதல் நிலவி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆட்சியில் பங்கீடு மற்றும் அதிக தொகுதிகள் வழங்கப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், மற்ற கூட்டணி கட்சிகளும் அதேபோல் திமுக மீது நெருக்கடி அதிகரித்து வருகின்றன.
இதற்கிடையில், சாதி அடிப்படையிலான அரசியலால் பட்டியலின மக்களுக்கு எதிரான வெறுப்பை பாமக பரப்பி வருவதாக குற்றம்சாட்டியுள்ள விசிக தலைவர் திருமாவளவன், பாமக இடம்பெறும் எந்த கூட்டணியிலும் தங்களது கட்சி இணைவதில்லை என்ற தீர்மானத்தை எடுக்கும் முழு உரிமையும் விசிகவுக்கு உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
விசிகவுக்கு எதிரான முடிவுகள் எடுக்கப்பட்டால், கூட்டணியில் இருந்து வெளியேறுவது தவிர வேறு வழியில்லை என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதேபோல், சட்டமன்றத் தேர்தலில் மமக கட்சிக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என அதன் தலைவர் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளும் கூடுதல் தொகுதிகளை கோரி முன்வருவதால், திமுகக்கு அரசியல் ரீதியாக கூடுதல் அழுத்தம் உருவாகி வருகிறது.