பிரதமருக்கான அரசு விருந்தில் ‘நாளை நமதே’ பாடல் – நயினார் நாகேந்திரன் பெருமை வெளிப்பாடு
அரசுத் துறைச் சார்ந்த வெளிநாட்டு பயணமாக மலேசியாவிற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட அரசு விருந்தில், தமிழகத்தின் தனித்துவமான பண்பாட்டு அடையாளமாகத் திகழும் டாக்டர் எம்ஜிஆர் நடித்த திரைப்படத்தில் இடம்பெற்ற “நாளை நமதே” என்ற ஊக்கமளிக்கும் பாடல் இசைக்கப்பட்டிருப்பது, தமிழர்களுக்கே உரிய பெருமை என தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எளிய குடும்பத்தில் பிறந்து, தமிழ்த் திரையுலகில் தன் வாழ்க்கைப் பயணத்தை தொடங்கி, பின்னர் தமிழக அரசியலில் மாபெரும் தலைவராக உயர்ந்ததோடு, தன்னலமற்ற சேவை மனப்பான்மையால் “பொன்மனச் செம்மல்” என மக்களின் இதயங்களில் நிலைத்த இடம் பெற்ற டாக்டர் எம்ஜிஆர் அவர்களுக்கு, வெளிநாடுகளின் தலைவர்களே ரசிகர்களாக இருப்பதை காணும் போது, ஒரு தமிழனாக தனக்கு அளவற்ற பெருமை ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மனம் தளரும்போது உற்சாகம் அளிக்கும் பாடலாக தமிழக மக்களின் உணர்வுகளோடு இணைந்திருக்கும் “நாளை நமதே” என்ற பாடலை, இந்தியாவின் முன்னேற்றத்தை வெற்றிப் பாதையில் கொண்டு செல்லும் தன்னலமற்ற தலைவரான பிரதமர் நரேந்திர மோடிக்கு, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் அர்ப்பணித்திருப்பது மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, “காலங்கள் எனும் சோலைகள் மலர்ந்து, காய் கனியாகும் நமக்கென வளர்ந்து” என்ற பாடல் வரிகள், பிரதமர் முன்வைக்கும் தொலைநோக்குப் பார்வையான “வளர்ந்த இந்தியா” என்ற இலக்கையும், விரைவில் தமிழகத்தில் உருவாகக்கூடிய அரசியல் மாற்றங்களையும் தெளிவாக எடுத்துக்காட்டுவது போன்று இருப்பது ஆச்சரியமளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், வெளிநாட்டு தலைவர்கள் இந்திய பிரதமரை எதிர்காலத்தின் நம்பிக்கையாக பார்க்கின்றனர் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உறுதியான சான்றாக விளங்குவதாகவும், இந்தக் காட்சியை எத்தனை முறை பார்த்தாலும் மனம் நிறைவடையாத அளவிற்கு அது பெருமை தருவதாகவும் நயினார் நாகேந்திரன் புகழாரம் சூட்டியுள்ளார்.