புனரமைப்பு முழுமையடையாத நிலையில் கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்துவது ஆட்சிக்கு சாதகமல்ல
தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அணியில் மேலும் சில அரசியல் கட்சிகள் இணையும் வாய்ப்பு இருப்பதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் ஊடகங்களை சந்தித்த அவர், மதுராந்தகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்றதைத் தொடர்ந்து, என்டிஏ கூட்டணிக்கு புதிய உற்சாகம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
பொதுமக்கள் மனநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் காரணமாக, வருங்காலத்தில் மேலும் சில கட்சிகள் என்டிஏ அணியில் இணைவதற்கான சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர் விளக்கினார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி பதவியில் இருந்த காலகட்டத்தில், திமுகவினர் பொதுமேடைகளில் பெண்களை அவமதிக்கும் வகையில் பேசியதாகவும், அதே போக்கு தற்போது மீண்டும் தொடர்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
பெண்களை இழிவுபடுத்தும் பேச்சுகள் திமுகவுக்கு பெரும் அரசியல் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும், தேர்தல் நெருங்கும் சூழலில் அவசர முடிவாக கோயில்களில் கும்பாபிஷேகங்களை அரசு நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், சீரமைப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் இன்னும் நிறைவு பெறாத நிலையில் கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்துவது நல்லாட்சி என்ற கோட்பாட்டிற்கு உகந்ததல்ல என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.