புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு வீரர் கொலை: குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு வீரர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, குற்றத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அழகாம்பாள்புரம் அருகே உள்ள வேப்பங்குடி கிராமத்தைச் சேர்ந்த இன்பரசன், ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரராக அறியப்பட்டவர். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கும், ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்தல் மற்றும் விற்பனை செய்வது தொடர்பாக நீண்ட காலமாக விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அழகாம்பாள்புரம் அரசு பள்ளி அருகே இன்பரசனை வழிமறித்த விக்னேஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து அவரை சுற்றிவளைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பியோடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அங்கு விரைந்து சென்று, இன்பரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, குற்றத்தில் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி, இன்பரசனின் உறவினர்கள் முள்ளூர்–புதுக்கோட்டை பிரிவு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மறியல் காரணமாக அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.