மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் உள்ள நிலையில், தனி நீதிபதி விசாரணைக்கு தடை விதிக்க முடியாது – உயர்நீதிமன்றம்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக, தேவஸ்தானம் இதுவரை ஏன் எந்த முடிவும் எடுக்கவில்லை என மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
அப்போது வக்பு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அந்தத் தூண் தர்காவுக்குச் சொந்தமான இடத்தில் அமைந்துள்ளதாகவும், முந்தைய நீதிமன்ற உத்தரவுகளில் “தீபத் தூண்” என எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றும் வாதிட்டார்.
இதற்கு எதிர்வாதமாக மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தர்காவிலிருந்து 15 மீட்டர் தூரத்திற்கு அப்பால் தீபம் ஏற்றலாம் என்று ஏற்கனவே நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், பக்தர்களின் நம்பிக்கை மற்றும் விருப்பத்தை நிறைவேற்றுவது கோயில் நிர்வாகம் மற்றும் தேவஸ்தானத்தின் கடமை என்றும் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள்,
- தூண் தர்காவிலிருந்து 15 மீட்டர் தொலைவில் உள்ளதா?
- அல்லது தர்காவின் சுற்றுச்சுவரிலிருந்து 15 மீட்டர் தொலைவில் உள்ளதா?
என்று கேள்விகளை எழுப்பினர்.
மேலும், உரிமை தொடர்புடைய விவகாரத்தில் தனி நீதிபதி உத்தரவு பிறப்பிக்க முடியுமா? என்றும், மேல்முறையீட்டு மனுக்களில் முன்வைக்கப்பட்ட வாதங்களுக்கு ஆதாரமாக அதிகாரப்பூர்வ ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளனவா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதனிடையே, புதன்கிழமை தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு நடைபெறவிருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தலைமைச் செயலாளர் மற்றும் ஏடிஜிபி ஆகியோர் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என அரசு தலைமை வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.
அந்த கோரிக்கையை பரிசீலித்த நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருக்கும் நிலையில், தனி நீதிபதி விசாரணைக்கு தடை விதிக்க இயலாது என்றும், தற்போதைய சூழலில் உடனடியாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்றும் தெரிவித்தனர்.