வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகக்கு உரிய பதில் கிடைக்கும் : நயினார் நாகேந்திரன்
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக அரசுக்கு மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த அரசு மாணவர் விடுதிகளில், 100-க்கும் அதிகமான விடுதிகள் மாணவர் சேர்க்கை குறைவெனக் கூறி மூடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், சமூகநீதியை பேசிக்கொண்டிருக்கும் திமுக அரசின் உண்மை முகத்தை வெளிப்படுத்துவதாக அவர் விமர்சித்துள்ளார்.
ஆதிதிராவிடர் மாணவர்களின் நலனுக்காக தொடர்ந்து முன்வைக்கப்படும் கோரிக்கைகளை முற்றிலும் புறக்கணித்த திமுக அரசு, தனது கவனக்குறைவு மற்றும் அலட்சியத்தால் இன்று நூற்றுக்கணக்கான அரசு விடுதிகளை மூடும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது என்றும், இது கடுமையான கண்டனத்திற்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசு மாணவர் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்படுவது, சுத்தமான குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாதது, மாணவர்களை சாதியை முன்னிட்டு அவமதிப்பது, வார இறுதி நாட்களில் வலுக்கட்டாயமாக விடுதிகளில் இருந்து வெளியேற்றுவது, திட்டமிட்ட வகையில் அரசு விடுதிகளை மூடும் போக்கு போன்ற செயல்கள் மூலம் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் எதிர்காலத்தை திமுக அரசு பாதித்து வருவதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இவ்வாறு ஆதிதிராவிடர் மாணவர்களின் நலனை புறக்கணித்து, அதிகார மமதையுடன் செயல்படும் திமுக அரசுக்கு, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றும், திமுகக்கு உரிய பாடம் கற்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.